Friday, 28 July 2017

அன்னை ஸ்ரீபால திரிபுரசுந்தரி துதி...!





தேடுகின்ற நெஞ்சினிற்குள் ஓடி வந்து நிற்பவள்
நாடி வந்த அன்பருக்கு நன்மை யாவும் செய்பவள்

(தேடுகின்ற நெஞ்சினிற்குள்...)

ஓடி வந்து உட்கலந்து சோதியாகி
நின்றவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(ஓடி வந்து உட்கலந்து ...)

(ஆதி அந்தமாகி நின்ற ... கோரஸ்)

மூன்றெழுத்து மந்திரத்தை மூலமாகக் கொண்டவள்
மூன்று நாதர் அவர்க்கும் தானே தாயுமாக  இருப்பவள்

(மூன்றெழுத்து மந்திரத்தை...)

மூவுலகை காத்து நிற்கும் சக்தியாகி நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(மூவுலகை காத்து நிற்கும்...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள்
கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள்

அம்மா என் அம்மா அம்மா அம்மா 

கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள்
காமன் மந்திரம் தனை மத்தியிலே வைத்தவள்

(கலைமகளின் மந்திரத்தை...)

செளக்கியம் தரும் மந்திரத்தை இறுதியாகக் கொண்டவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(செளக்கியம் தரும் ...)

(ஆதி அந்த மாகி நின்ற...கோரஸ்)

அன்பு கொண்ட நெஞ்சம் தனை அரியணையாய் வைத்தவள்
ஆசை கொண்டு அழைத்த போது ஓடி வந்து நிற்பவள்

(அன்பு கொண்ட நெஞ்சம்...)

இச்சை கொண்டு வந்து சேர்ந்து இன்பமுறச் செய்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(இச்சை கொண்டு ...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

ஈசன் முதல் தேவர் போற்றும் கன்னி தெய்வமானவள்
உயிருமாகி உடலுமாகி உணர்வுமாக இருப்பவள்

ஊக்கம் தந்து சோர்வு நீக்கி வேகந்தனை தருபவள்
ஆதி அந்த மாகி நின்ற அன்னை பாலை தானவள்

(ஊக்கம் தந்து சோர்வு ...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

என்று அவளை பார்ப்போம் என ஏக்கமுறச் செய்பவள்
என்று அவளை பார்ப்போம் என
ஏக்கமுறச் செய்பவள்

அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மம்மா 

என்று அவளை பார்ப்போம் என ஏக்கமுறச் செய்பவள்
ஏக்கம் தனை தீர்ப்பது போல் எதிரில் வந்து நிற்பவள்

(என்று அவளை பார்ப்போம்...)

ஐயம் தொலைத்த மனதினுள்ளே ஐக்கியமாகி நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(ஐயம் தொலைத்த ...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

ஒடுங்குகின்ற மனதினுள்ளே ஒளிமயமாய் வருபவள்
ஓடும் மனதை தடுத்தி நிறுத்தி ஆனந்தத்தை தருபவள்

(ஒடுங்குகின்ற மனதினுள்ளே...)

ஓளடதமாய் பிறவிப் பிணியை தீர்த்து நம்மைக் காப்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

கஞ்சமலரில் இருந்து நம்மை காமமுறச் செய்பவள்

கஞ்சமலரில் இருந்து நம்மை காமமுறச் செய்பவள்
தஞ்சம் என்று வந்தவரை தாங்கி நிற்கும் தாயவள்

கொஞ்சும் சலங்கை சலசலக்க ஓடி வந்து நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(கொஞ்சும் சலங்கை ...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

கவலை கொண்டு கதறும் போது கடுகி வந்து காப்பவள்
கருணை கண்கள் கொண்டு நம்மை விழி இமை போல காப்பவள்

(கவலை கொண்டு கதறும்...)

நெக்குறுகி அழைக்கும் போது சொக்கி வந்து நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(நெக்குறுகி அழைக்கும்...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

வினையறுத்து பகைமுடித்து விதியை மாற்றி வைப்பவள்
வினையறுத்து பகைமுடித்து விதியை மாற்றி வைப்பவள்

அம்மா என் அம்மா அம்மா அம்மா அம்மம்மம்மா

வினையறுத்து பகைமுடித்து விதியை மாற்றி வைப்பவள்
சதி ஒளித்து செருக்கறுத்து மதியை தெளிவு செய்பவள்

(வினையறுத்து பகைமுடித்து...)

குதித்து ஓடும் மனதை அடக்கி நிதியம் அருளைத் தருபவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(குதித்து ஓடும் மனதை...)

(ஆதி அந்தமாகி நின்ற...கோரஸ்)

குஞ்சலங்கள் ஆட ஆட குதித்து குதித்து வருபவள்
குறைகள் தீர்த்து குலத்தைக் காத்து குதூகலத்தைத் தருபவள்

(குஞ்சலங்கள் ஆட ஆட...)

குணத்தை செம்மையாக்கி வைக்கும் குற்றமில்லா குரு அவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(குணத்தை செம்மையாக்கி...)

(ஆதி அந்தமாகி நின்ற...கோரஸ்)

கொஞ்சிக் கொஞ்சிக் அழைக்கையிலே குழந்தையாக வருபவள்
வஞ்சனைகள் செய்பவரை வந்து நின்று ஒழிப்பவள்

(கொஞ்சிக் கொஞ்சிக்...)

தலை வணங்கி தாழ் பணிய வரமும் அருளும் தருபவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(தலை வணங்கி தாழ்...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

(ஆதி அந்தமாகி நின்ற...கோரஸ்)

ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

அன்னை பாலை தானவள்
அன்னை பாலை தானவள்

Tuesday, 6 December 2011

தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!

வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் வகுத்த உயர்நெறியே சன்மார்க்க சங்கமாய் உருவாகியது. அனைத்து உயிகளிடத்திலும் அன்பு செய்தலே சன்மார்க்கத்தின் முக்கியக் கொள்கை. சிறந்த மனிதநேயம் கொண்ட இவர். 'உயிர்களிடத்து இரக்கம் காட்டுங்கள். எல்லா உயிர்களையும் உங்களுடைய உயிர் போலவே எண்ணுங்கள், பாவியுங்கள்' என்று ஜீவ காருண்யத்தைப் போதித்தவர்.

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்,பசியினால் இளைத்தே
வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதித்தேன்..."

என்கிற பாடல் அவரது ஜீவகாருண்ய கொள்கையை உணர்த்தும். நிலம் வறண்டு போனாலும் மனிதனது மனம் வறண்டு போய்விடக்கூடாது என்பது அவரது எண்ணம்.

இராமலிங்க அடிகளாரின் பாடல்களில் தாயுமானவர், திருமூலர் போன்றோரின் சாயல் தென்படும். நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தரே இவருடைய மானசீக குரு. இராமலிங்கருக்கு இரவில் பாட்டெழுதுவது மிகவும் பிடித்தமான செயல். அருகே ஒரு எண்ணெய் விளக்கு வைத்துக் கொண்டு எழுதுவார்.

இப்படி எழுதும் போது ஒரு நாள் விளக்கிலே எண்ணெய் தீர்ந்து போய்விட்டது. எண்ணெய்ப் பாத்திரம் என்று நினைத்து பக்கத்தில் உள்ள தண்ணீர் பாத்திரத்திலிருந்து நீர் ஊற்றினார். விளக்கு அணையவில்லை. தொடர்ந்து எரிந்தது.

இதனை அவர் சீடர்களில் ஒருவரான தொழுதூர் வேலாயுதம் கண்டு வியந்தார். பின்னர்..

தண்ணீர் விளக்கெரித்த தன்மைபோல் மாந்தர்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் கண்மணியாம்
எங்கள் இராமலிங்கர் நல்ல அருட்பா முறையைத்
துங்கமுற மாணா தொழு.

இவ்வாறு தனது குருநாதரை போற்றி பாடினார்.

Saturday, 3 December 2011

சக்தி இல்லையேல் சிவனில்லை!

பிருங்கி முனிவர் வெகுகாலம் தவம் செய்து அஷ்டமா சித்துக்களையும் பெற்றிருந்தார். சிவனை மட்டுமே வழிபடுபவர். தினசரி சிவலோகம் சென்று சிவனை சுற்றிவந்து வழிபட்டுவிட்டு தான் அன்றைய வேலைகளை கவனிப்பார். இதைப் பார்த்த அன்னை பராசக்தி, சிவனிடம் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் போது பிருங்கி என்னைவிட்டு விட்டு உங்களை மட்டும் வழிபடுவது சரியா என்று கேட்டாள். அதற்கு சிவனோ அவன் என் மீது அளவு கடந்த பக்தி கொண்டவன். என்னை வழிபட்டாலே உன்னையும் வழிபடுவது போல தான். அதனால் தவறாக எண்ணாதே என்று சொல்லிவிட்டார்.

ஆனால் சக்தி சமாதானம் அடையாமல் நாம் இருவரும் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்போம் அப்போது என்ன செய்கிறான் பார்ப்போம் என்று சொல்ல சிவனும் அதற்கு சம்மதித்தார். எப்போதும் போல சிவனை வழிபட வந்த பிருங்கி முனிவர் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்பதை பார்த்து ஒரு வண்டாக உருமாறி சிவனின் பாகத்தை மட்டும் சுற்றி வந்து வழிபாட்டு விட்டு பிறகு தன்னுடைய உருவத்திற்கு மாறி செல்ல முற்பட்டார்.

இதைக்கண்டு கடுங்கோபம் கொண்ட சக்தி, பிருங்கி முனிவரை தடுத்து என்னுடைய சக்தி இருப்பதால் தானே சிவனை சுற்றி வருகிறாய் என்று சொல்லி அவரிடமிருந்த சக்தி முழுவதையும் பறித்து விட்டாள். சக்தியை இழந்த பிருங்கி முனிவரின் உடம்பில் இருந்த சதைகள் எல்லாம் அற்று விழ வெறும் எலும்புக்கூடோடு ஜீவனை மட்டும் விடாது இருந்தார். சக்தி போனதால் அவரிடமிருந்த அஷ்டமா சித்துக்களும் போய்விட்டன. ஜீவனும் போகும் தருவாயில் சிவன் தன் தண்டத்தை எலும்புக்கூட்டிடம் கொடுத்து காப்பாற்றி, சக்தியிடம் அவர் உடம்பை தருமாறு கூறினார்.

சக்தியும் சிவன் கூறியபடியே பிருங்கி முனிவரிடம் பறித்த சக்திகளை எல்லாம் திருப்பி கொடுத்தாள். பிருங்கி முனிவரும் தன் தவறை உணர்ந்து அன்னையிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவனும் பராசக்தியும் மனம் குளிர்ந்து பிருங்கி முனிவரை வாழ்த்தினர்.

Friday, 4 November 2011

திருநீறு குழந்தையான கதை...!

மச்சேந்திரர் ஒரு ஊரின் வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் அவரைக் கண்டு பிச்சையிட்டாள். ஆனால் அவளது முகம் வாடியிருந்தது. அதைக் கண்ணுற்ற மச்சேந்திரர் உன் குறை என்ன என்று கேட்க அவளோ தனக்கு மக்கட்பேறு இல்லை எனக் கூறினாள்.

மச்சேந்திரர் அவள் மீது இரக்கம் கொண்டு சிறிது திருநீற்றை அளித்தார். இதனை நீ உட்கொண்டால் மக்கட்பேற்றை அடைவாய் என்று வாழ்த்திச் சென்றார்.

திருநீறு பெற்றவள் அதனை உட்கொள்ளாமல் பக்கத்து வீட்டுக்காரியிடம் தெரிவித்தாள். பக்கத்து வீட்டுக்காரியோ உனக்கு திருநீறு கொடுத்தவர் போலித்துறவியா கூட இருக்கலாம். உன்னை மயக்கி அடைவதற்காக கூட இத்திருநீற்றை கொடுத்து இருக்கலாம் என்று கூறினாள். ஆகவே நீ  திருநீற்றை உட்கொள்ளாதே என்றாள்.

இதனால் அச்சம் அடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் போட்டுவிட்டாள்.

சில ஆண்டுகள் கழித்து மச்சேந்திரர் மறுபடியும் அந்த ஊருக்கு வந்தார். தான் முன்பு பிள்ளைப்பேற்றிற்காக  திருநீறு அளித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று,அம்மணி உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும் அவனை அழைப்பாயாக என்றார்.

பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு திருநீற்றை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்போது குழந்தை இல்லாமல் வருந்தும் நிலையைக் கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்.

அவளது நிலையைக் கண்டு மனம் இரங்கிய மச்சேந்திரர், சரி அந்த திருநீற்றை எங்கு கொட்டினாய் என்றார். அவளும் அடுப்பு சாம்பலை வழக்கமாக கொட்டும் இடத்தில் தான் அந்த திருநீறு இருந்த சாம்பலையும்  கொட்டியதாக சொல்லி, அச்சாம்பல் கொட்டப்பட்டு இருந்த குப்பை மேட்டை காட்டினாள்.

மச்சேந்திரர் குப்பைப்பட்டரையிடம் சென்று கோரக்கா என்று கூப்பிட்டார். குப்பைப் பட்டறையில் இருந்து ஏன் என்னும் ஒலி கேட்டது.

மச்சேந்திரர் அங்கிருந்தவர்களிடம் குப்பையை அகற்றுமாறு கூறினார். அதிலிருந்து குழந்தை ஒன்று, மச்சேந்திரர் திருநீறு கொடுத்த காலத்திலிருந்து இருக்க வேண்டிய வளர்ச்சியோடு வெளியில் வந்தது.

மச்சேந்திரர் அக்குழந்தையை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையோ பெண்மணியிடம் இருக்கப் பிடிக்காமல் மச்சேந்திரரை பின் தொடர்ந்து சென்று பெரிய சித்தர் ஆகி குருவை மிஞ்சிய சீடர் ஆனார்.

Friday, 28 October 2011

ஓங்காரம்...!





















ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி
ஓமெனும் ஓங்காரத்துள்ளே உருவரு
ஓமெனும் ஓங்காரத்துள்ளே பலபேதம்
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒண் முத்தி சித்தியே.

- திருமந்திரம்.


ஓம் என்பதே பிரணவ மந்திரம். ஓம் என்று கூறியே மந்திரங்களை ஓத வேண்டும். ஆதியில் ஓம் என்று கூறியே வேதங்களை ஓதத் தொடங்குவர். பின்னரே "ஹரி ஓம்" என்று அதை மாற்றினர்.

அ , உ , ம்

என்ற மூன்று எழுத்துக்களே ஓம் ஆகும். வாயைத் திறப்பதன் மூலம் அ ஒலியும் உதட்டைக் குவித்தல் மூலம் உ ஒலியும் வாயை மூடுதல் மூலம் ம் ஒலியும் ஒலிக்கும். உலகில் பேசும் மொழி எதுவாயினும் அதற்கு வாயின் இம்மூன்று அசைவுகளும் இன்றியமையாததாகும். ஓம் எந்த மொழியையும் சேர்ந்ததன்று. அது பொதுவாக இறைவனைக் குறிக்கும் ஒரு மந்திர ஒலி.தமிழைப் பொறுத்தவரை "ஓ" வின் அமைப்புப் பிள்ளையாரின் யானை முகத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாம் எழுதத் தொடங்கும் பொழுது போடும் பிள்ளையார் சுழி ( உ) தான் ஓம். மந்திரங்களை ஓதும் பொழுது ஓம் ஒலியுடன் தொடங்குதல் மரபு.

ஔவை சொல்லும் இடைபிங்கலையின் எழுத்தும் அதுவே!

Thursday, 27 October 2011

கண்ணை வைத்துக் கொண்டு வடையைத் தா!!



ஒரு நாள் கோரக்கர் ஒரு வீட்டிற்கு சென்று பிச்சை கேட்டார். அவ்வீட்டுப் பெண்மணி ஒரு வடையை பிச்சையாக இட்டார். கோரக்கர் அவ்வடையைத் தம்முடைய குருநாதர் மச்சேந்திரருக்கு கொடுத்தார். வடையத் தின்ற மச்சேந்திரர் அதன் சுவையில் மயங்கி மறுநாளும் அதுபோல வடை வேண்டும் என்று கேட்டார்.

சீடராகிய கோரக்கர் முதல் நாள் வடையை பிச்சையாக இட்ட வீட்டிற்கு சென்று பிச்சை கேட்டார். அன்று அந்த வீட்டுப் பெண்மணி சாதம் போட்டாள்.கோரக்கர் தமக்கு சாதம் தேவை இல்லை என்றும் வடை தான் வேண்டும் என்றும் கேட்டார்.

அதைக் கேட்ட அந்தப் பெண்மணி, நேற்று வடை சுட்டேன். அதனால் வடையை பிச்சையாக இட்டேன். இன்று வடை சுடவில்லையே, இருப்பதைத் தானே கொடுக்க முடியும். இல்லாததைக் கொடு என்றால் என்ன செய்வது? இருப்பதை பெற்றுக் கொள்ளுங்கள் என்றாள்.

கோரக்கர் அதைக் கேட்டு சமாதானம் அடையவில்லை. தன் குருவானவர் ஒன்றின் மீது ஆசை வைத்துவிட்டார். அதனை நிறைவேற்றுவது சீடராகிய தமது கடமை என்று கூறினார்.

இதைக்கேட்டு எரிச்சலுற்ற பெண்மணி, சரி வடை என்பதால் போயிற்று. இதுவே உன்னுடைய கண்ணைக் கொடு என்றால் உடனே பெயர்த்து கொடுத்து விடுவாயா என்று கோரக்கரிடம் கேட்டாள்.

இதனைக் கேட்ட கோரக்கர் என்னுடைய குரு என் கண்ணைக் கேட்டாலும் கொடுக்கக் காத்திருக்கிறேன் என்று கூறி, அந்தக் கண்ணை நீயே வைத்துக் கொண்டு வடை கொடு என்று தன்னுடைய ஒரு கண்ணை பெயர்த்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்து விட்டார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத அந்தப்பெண்மணி, மிகுந்த அச்சம் கொண்டு இனிமையான வடைகளை சுட்டு கோரக்கரிடம் கொடுத்து அனுப்பினாள். அதனைக் கோரக்கர் தன்னுடைய குருவிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.

வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரைப் பார்த்து உனது ஒரு கண் எங்கே என்று கேட்டார். கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார். இதனைக் கேட்ட குரு தன் சீடன் தன்மீது வைத்திருந்த அன்பை உணர்ந்து கோரக்கர் இழந்த கண்ணைத் திரும்பப் பெறுமாறு செய்தார்.

Saturday, 22 October 2011

திருவண்ணாமலை சித்தர் - சப்தகந்த அடியார்!



தினசரி ஏழு முறை திருவண்ணாமலையை கிரிவலம் வரும் இவர் மாதத்தில் ஏழு நாட்கள் மட்டுமே உணவு உட்கொள்வாராம். மீதி நாட்களில் உண்ணா நோன்பு இருப்பாராம்.

எப்போதும் இவரது உடலில் இருந்து ஒருவித நறுமணம் வீசுமாம். இவரது தலைமுடி பொற்கம்பி இழைகளாக இருக்குமாம். ஆனால் இவைகள் தாமாக எப்போதும் உதிர்வதில்லையாம். மாத சிவராத்தி தொடங்கி ஏழு நாட்கள் இவர் கிரிவலம் செய்யத்தொடங்கும் காலம். இந்தக் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடி உதிருமாம்.

ஆனால் அப்படி உதிர்ந்தமுடிகள் நம் கண்களில் காண முடியாதாம். அந்தப் பொன் முடிகள் உதிர்ந்த இடங்களில் எல்லாம் லிங்கங்கள் தோன்றுமாம். இவ்வாறு ஏழு கிரிவலங்களிலும் ஏழு பொன்முடிகள் உதிர்ந்த இடங்களில் ஏழு சிவலிங்கங்கள் தோன்றின. அவை சப்தகந்த லிங்கங்கள் என்று அழைக்கப்பட்டன.

ஒவ்வொரு கிரிவலத்தின் போதும் இவர் தலைமுடி உதிர உதிர இறைவனே அவருக்கு காட்சியளித்து முதல் கந்தம் முற்றியது, இரண்டாம் கந்தம் முற்றியது என ஏழு கந்தங்களுக்கும் இறைவன் சொல்வாராம். அப்படி இறைவன் சொல்லிய இடங்களில் தோன்றிய லிங்கங்களே சப்தகந்த லிங்கங்கள் என்றும் கூறப்படுகின்றன.