Tuesday, 6 December 2011

தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!

வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் வகுத்த உயர்நெறியே சன்மார்க்க சங்கமாய் உருவாகியது. அனைத்து உயிகளிடத்திலும் அன்பு செய்தலே சன்மார்க்கத்தின் முக்கியக் கொள்கை. சிறந்த மனிதநேயம் கொண்ட இவர். 'உயிர்களிடத்து இரக்கம் காட்டுங்கள். எல்லா உயிர்களையும் உங்களுடைய உயிர் போலவே எண்ணுங்கள், பாவியுங்கள்' என்று ஜீவ காருண்யத்தைப் போதித்தவர்.

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்,பசியினால் இளைத்தே
வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதித்தேன்..."

என்கிற பாடல் அவரது ஜீவகாருண்ய கொள்கையை உணர்த்தும். நிலம் வறண்டு போனாலும் மனிதனது மனம் வறண்டு போய்விடக்கூடாது என்பது அவரது எண்ணம்.

இராமலிங்க அடிகளாரின் பாடல்களில் தாயுமானவர், திருமூலர் போன்றோரின் சாயல் தென்படும். நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தரே இவருடைய மானசீக குரு. இராமலிங்கருக்கு இரவில் பாட்டெழுதுவது மிகவும் பிடித்தமான செயல். அருகே ஒரு எண்ணெய் விளக்கு வைத்துக் கொண்டு எழுதுவார்.

இப்படி எழுதும் போது ஒரு நாள் விளக்கிலே எண்ணெய் தீர்ந்து போய்விட்டது. எண்ணெய்ப் பாத்திரம் என்று நினைத்து பக்கத்தில் உள்ள தண்ணீர் பாத்திரத்திலிருந்து நீர் ஊற்றினார். விளக்கு அணையவில்லை. தொடர்ந்து எரிந்தது.

இதனை அவர் சீடர்களில் ஒருவரான தொழுதூர் வேலாயுதம் கண்டு வியந்தார். பின்னர்..

தண்ணீர் விளக்கெரித்த தன்மைபோல் மாந்தர்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் கண்மணியாம்
எங்கள் இராமலிங்கர் நல்ல அருட்பா முறையைத்
துங்கமுற மாணா தொழு.

இவ்வாறு தனது குருநாதரை போற்றி பாடினார்.

Saturday, 3 December 2011

சக்தி இல்லையேல் சிவனில்லை!

பிருங்கி முனிவர் வெகுகாலம் தவம் செய்து அஷ்டமா சித்துக்களையும் பெற்றிருந்தார். சிவனை மட்டுமே வழிபடுபவர். தினசரி சிவலோகம் சென்று சிவனை சுற்றிவந்து வழிபட்டுவிட்டு தான் அன்றைய வேலைகளை கவனிப்பார். இதைப் பார்த்த அன்னை பராசக்தி, சிவனிடம் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் போது பிருங்கி என்னைவிட்டு விட்டு உங்களை மட்டும் வழிபடுவது சரியா என்று கேட்டாள். அதற்கு சிவனோ அவன் என் மீது அளவு கடந்த பக்தி கொண்டவன். என்னை வழிபட்டாலே உன்னையும் வழிபடுவது போல தான். அதனால் தவறாக எண்ணாதே என்று சொல்லிவிட்டார்.

ஆனால் சக்தி சமாதானம் அடையாமல் நாம் இருவரும் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்போம் அப்போது என்ன செய்கிறான் பார்ப்போம் என்று சொல்ல சிவனும் அதற்கு சம்மதித்தார். எப்போதும் போல சிவனை வழிபட வந்த பிருங்கி முனிவர் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்பதை பார்த்து ஒரு வண்டாக உருமாறி சிவனின் பாகத்தை மட்டும் சுற்றி வந்து வழிபாட்டு விட்டு பிறகு தன்னுடைய உருவத்திற்கு மாறி செல்ல முற்பட்டார்.

இதைக்கண்டு கடுங்கோபம் கொண்ட சக்தி, பிருங்கி முனிவரை தடுத்து என்னுடைய சக்தி இருப்பதால் தானே சிவனை சுற்றி வருகிறாய் என்று சொல்லி அவரிடமிருந்த சக்தி முழுவதையும் பறித்து விட்டாள். சக்தியை இழந்த பிருங்கி முனிவரின் உடம்பில் இருந்த சதைகள் எல்லாம் அற்று விழ வெறும் எலும்புக்கூடோடு ஜீவனை மட்டும் விடாது இருந்தார். சக்தி போனதால் அவரிடமிருந்த அஷ்டமா சித்துக்களும் போய்விட்டன. ஜீவனும் போகும் தருவாயில் சிவன் தன் தண்டத்தை எலும்புக்கூட்டிடம் கொடுத்து காப்பாற்றி, சக்தியிடம் அவர் உடம்பை தருமாறு கூறினார்.

சக்தியும் சிவன் கூறியபடியே பிருங்கி முனிவரிடம் பறித்த சக்திகளை எல்லாம் திருப்பி கொடுத்தாள். பிருங்கி முனிவரும் தன் தவறை உணர்ந்து அன்னையிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவனும் பராசக்தியும் மனம் குளிர்ந்து பிருங்கி முனிவரை வாழ்த்தினர்.