Tuesday, 12 August 2025
கோவிலுக்கு குழந்தையை தத்துக் கொடுப்பது எப்படி...!
கோவிலுக்கு குழந்தைகளை தத்துக் கொடுக்கும் வழக்கம் முன்பு போல பெரிய அளவில் இல்லை என்றாலும் இன்றும் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இதற்கென்று பிரத்தியேகமான சில நடைமுறைகள் உண்டு. அதற்கு முன் ஏன் தத்துக் கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
குழந்தையின் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் குழந்தைக்கு கண்டம்/சரி செய்ய இயலாத அளவிலான உடல் நலக் கோளாறுகள்/பெற்றோருக்கு குழந்தையினால் பாரிய அளவிலான பாதிப்புகள் வரும் என ஜோதிடர் கணிக்கும் பட்சத்தில் குழந்தையை தத்துக் கொடுக்க பரிந்துரை செய்வார்.
குலதெய்வக் கோவிலுகோ அல்லது இஷ்ட தெய்வக் கோவிலுக்கோ குழந்தையை தத்துக் கொடுக்கலாம். உக்கிர தெய்வமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது உத்தமம்.
குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் தான் தத்துக் கொடுக்க வேண்டும். ஒரு செப்புத் தாம்பாளம்/ஒரு தென்னங்கன்று/குழந்தையின் இரு கைகளும் கொள்ளும் அளவிற்கான சில்லறைக் காசுகள் மூன்று மடங்கு இவற்றோடு குழந்தையையும் தூக்கிக் கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். ஐயர் உள்ள கோவிலாக பார்த்துச் செல்வது சிறப்பானதாகும்.
காலையில் 11 மணிக்கு முன்பாக சென்று குழந்தையை தத்துக் கொடுத்து விட்டு பெற்றோர்கள் குழந்தையை திரும்பிப் பார்க்காமல் கோவில் எல்லையை தாண்டியோ அல்லது குழந்தை கண்ணில் படாதவாறு சற்று தூரமாகவோ சென்று விட வேண்டும். பிறகு உறவு முறை இல்லாத தம்பதியர் சென்று அந்தக் குழந்தையை தான் வளர்ப்பதாக கூறி கோவிலுக்கு காசு கொடுத்துவிட்டு வாங்கிக் கொண்டு வரவேண்டும். அப்படி குழந்தையை வாங்கி வந்தபிறகு குழந்தை அணிந்திருக்கும் உடுப்பை பிறர் பயன்படுத்த முடியாதவாறு கிழித்து எறிந்துவிட்டு புது உடுப்பை உடுத்த வேண்டும். இந்த புது உடுப்பை தத்து வாங்கிய தம்பதியரே கோவிலுக்கு வரும் போது தங்கள் செலவில் வாங்கி வரவேண்டும்.
கோவில் எல்லை தாண்டி வந்து குழந்தையை பெற்றொரிடம் ஒப்படைத்து விடவேண்டும். தத்து வாங்கியவரோ பெற்றோரோ அதன் பிறகு அந்தக் குழந்தையின் மீது எந்த உரிமையும் கோரக் கூடாது. அந்த குழந்தைக்கு அதன் பிறகு முக்கியான எந்த விஷயமாக இருந்தாலும் கோவிலில் உத்தரவு வாங்கியே செய்து வரவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
