சோதிடத்தில், ராகு-கேது கிரகங்களின் பார்வையினால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் விளைவுகளையுமே நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்கின்றனர். சோதிடவியலில் நாகதோஷம் கடுமையானது அல்லது துயரம் மிகுந்த ஒன்றாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடும் உத்திகளைத்தான் பொதுவில் பரிகாரம் என்கின்றனர்.
போகர் தனது ”போகர்12000” நூலில் நாகதோஷம் பற்றிய குறிப்புகளை விரிவாக கூறியிருக்கிறார். அதன் சாரம் பின்வருமாறு.....
பிறப்பினால் ஒருவரின் ஜாதக அமைப்பில் ராகு, கேது கிரகங்கள், சில இடங்களில் அமைவதால் நாகதோஷம் ஏற்படுவது ஒருவகை என்றும், பாம்பு புற்றினை இடித்தல் அல்லது பாம்புகளை கொல்வது போன்ற பாவச் செயல்களினால் நாகதோஷம் ஏற்படுவது இன்னொரு வகை என்கிறார்.
போகர் பாம்புகளை “உயிர் விழுங்கிகள்” என்கிறார். உறுப்புகளற்ற இந்த உயிரினம், ஒன்றுதான் இரையினை உயிருடன் விழுங்குவதாகவும், தினம் தினம் இவற்றில் உயிர்கள் அடங்குவதாகவும் குறிப்பிடுகிறார். இருளுக்குள் அடைந்துவாழும் பாம்பின் பிறப்பு என்பது ஒரு வகையான சாபம் பெற்ற பிறப்பு என்றும், இவற்றைக் கொல்வதால் அந்த சாபம் கொல்பவரை தொற்றிக் கொள்ளும் என்றும் கூறுகிறார்.
பாம்புகள் வசிக்கும் புற்றானது, கோவில் கருவறைகளுக்கு ஒப்பான ஆற்றல் மையம் என்கிறார் போகர். இத்தகைய புற்றுக்கள் எல்லா இடங்களிலும் அமைவதில்லை என்றும், புற்றுகள் அமைந்துள்ள இடம் தனித்துவமான வாஸ்து சக்தியுள்ளவை என்கிறார். கரையான்கள் பூமியின் ஆழம் சென்று சேகரித்து வரும் பிரத்யேக மணலில், தமது உமிழ்நீரைக் கலந்து புற்றுகளை அமைக்கின்றன. இந்த புற்று மணலில் ஒரு வகையான உயர் ரக பாதரசம் கலந்திருப்பதாகவும் அதனை பிரிக்கும் முறையினையும் தனது நூலில் போகர் விளக்கியிருக்கிறார்.
இத்தகைய நாக தோஷம் உள்ளவர்களுக்கு, கல்வி, திருமணம், புத்திர பாக்கியம் போன்றவற்றில் பாரிய தடைகள் மற்றும் பிரச்சனைகள் உருவாகும். முறையான பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தடைகள் நீங்கி சுக வாழ்வு வாழலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாகபஞ்சமி திதி”.
அமாவாசை கழிந்து வரும் ஐந்தாவது நாளான வளர்பிறை பஞ்சமி திதி பற்றியே போகர் சொல்லி இருக்கிறார் .. அதிலும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைப் பஞ்சமி நாள்தான் ”நாகபஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக பஞ்சமி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது.
சித்தர்கள் எதனைச் செய்தாலும், தங்களின் ஆதி குருவான சிவனை வணங்கியே துவங்குகின்றனர். தங்களைப் போலவே நாகங்களும் ஆதி குருவான சிவனையே பூசிப்பதாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
இனி நாகதோஷத்திற்கான பரிகாரத்தினைப் பார்ப்போம்...
ஆவனி மாதத்து வளர்பிறை பஞ்சமியான,அதாவது அம்மாவாசை கழித்து ஐந்தாவது நாளான ”நாக பஞ்சமி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.
பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நாக விக்கிரகத்தின் மாதிரி படம்..
நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.
நாகதோஷம் உள்ளவர்கள், *ஆவணி வளர்பிறைப் பஞ்சமி திதியன்று செய்ய வழி இல்லாவிட்டால் தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில்* நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி, நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழ்ந்திடுங்கள்.
பிரதிஷ்டை செய்த நாளையும் சேர்த்து 11,13,21,24,48 நாட்களுக்கு தினமும் வழிபட்டு வரலாம்.
அப்படி செய்ய இயலாதவர்கள் முதல் நாள் பிரதிஷ்டை முடிந்து வணங்கிவிட்டு, மீதி நாட்களுக்கு பிராமண அர்ச்சகர் மூலமாக தினமும் நைவேத்யம் படைத்து வர சொல்லலாம்.
முதல் நாள் பிரதிஷ்டையின் போது மனம் போன போக்கில் எதை எதையோ வேண்டிக் கொண்டிருக்காமல்,முழு மனதோடு பயபக்தியோடு மனதை ஒருமுகப் படுத்தி தனக்கு எது முதன்மையானதாக தேவையோ அதை வேண்டிக் கொள்ளலாம்.
நன்றி : wwww.siththarkal.com

0 comments:
Post a Comment