Monday, 17 October 2011
தங்க மோகம் இல்லாத பெண்...!
சிவவாக்கியர் ஒரு நாள் கொங்கணச் சித்தரைச் சந்திக்க நேரிட்டது. இருவரும் அளவளாவி மகிழ்ந்தார்கள். அதன் பிறகு கொங்கண சித்தர் அடிக்கடி சிவவாக்கியரை வந்து பார்த்துச் செல்வது வழக்கமாக இருந்தது.
கொங்கண சித்தர் பார்க்க வரும் போதெல்லாம் சிவவாக்கியர் மூங்கில் வெட்டுவதும் கூடை பின்னுவதுமாக இருந்ததைப் பார்த்த கொங்கண சித்தர், சிவவாக்கியர் எல்லா வித்தைகள் அறிந்திருந்தும் வறுமையில் உழல்கிறாரே என்று எண்ணி வருந்தினார்.
ஒருநாள் சிவவாக்கியர் இல்லாத போது வந்த கொங்கண சித்தர், சிவாக்கியரின் மனைவியிடம் இரும்புத் துண்டு கொண்டு வரும்படி கூறினார்.அவரும் தேடிப்பிடித்து ஒரு இரும்புத்துண்டை கொண்டு வந்து கொடுத்தார். கொங்கண சித்தரும் அதை உடனே தங்கமாக மாற்றிக் கொடுத்து விட்டுப் போனார்.
சிவவாக்கியர் வீட்டிற்கு வந்ததும் நடந்த விபரத்தை அவரது மனைவி கூறவும், சிவவாக்கியர் அந்த தங்கத்துண்டைக் கையால் கூட தொடாமல் கிணற்றில் போடும்படி உத்தரவிட்டார்.
அவரது மனைவியும் அவர் கூறிய படியே அந்தத் தங்கத்துண்டை பாழும் கிணற்றில் போட்டுவிட்டு வந்தார்.
இருப்பினும் சிவவாக்கியருக்கு தனது மனைவி மீது சிறிது சந்தேகம் இருந்தது. ஒருவேளை அவள் தங்கத்தின் மீது ஆசை வைத்திது கொங்கணவரிடம் கேட்டிருப்பாளோ என்று எண்ணி அதனைச் சோதிக்கவும் விரும்பினார்.
ஒரு செங்கல்லை எடுத்து வரச்சொல்லி அதன் மீது சிறுநீர் கழித்தார். பின் அதன் மீது தண்ணீரை ஊற்றும்படி கூறினார். சிறிது நேரத்தில் செங்கல் தங்கமாக மாறியது. அதனை எடுத்துக்கொள்ளும்படி மனைவியிடம் கூறினார். ஆனால் அவர் மனைவியோ தனக்கு தங்கம் வேண்டாம் என்று கூறிவிட்டாள். மனைவியின் பக்குவத்தை உணர்ந்த சிவவாக்கியரின் மனம் மகிழ்ந்தது.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment