Thursday, 27 October 2011

கண்ணை வைத்துக் கொண்டு வடையைத் தா!!



ஒரு நாள் கோரக்கர் ஒரு வீட்டிற்கு சென்று பிச்சை கேட்டார். அவ்வீட்டுப் பெண்மணி ஒரு வடையை பிச்சையாக இட்டார். கோரக்கர் அவ்வடையைத் தம்முடைய குருநாதர் மச்சேந்திரருக்கு கொடுத்தார். வடையத் தின்ற மச்சேந்திரர் அதன் சுவையில் மயங்கி மறுநாளும் அதுபோல வடை வேண்டும் என்று கேட்டார்.

சீடராகிய கோரக்கர் முதல் நாள் வடையை பிச்சையாக இட்ட வீட்டிற்கு சென்று பிச்சை கேட்டார். அன்று அந்த வீட்டுப் பெண்மணி சாதம் போட்டாள்.கோரக்கர் தமக்கு சாதம் தேவை இல்லை என்றும் வடை தான் வேண்டும் என்றும் கேட்டார்.

அதைக் கேட்ட அந்தப் பெண்மணி, நேற்று வடை சுட்டேன். அதனால் வடையை பிச்சையாக இட்டேன். இன்று வடை சுடவில்லையே, இருப்பதைத் தானே கொடுக்க முடியும். இல்லாததைக் கொடு என்றால் என்ன செய்வது? இருப்பதை பெற்றுக் கொள்ளுங்கள் என்றாள்.

கோரக்கர் அதைக் கேட்டு சமாதானம் அடையவில்லை. தன் குருவானவர் ஒன்றின் மீது ஆசை வைத்துவிட்டார். அதனை நிறைவேற்றுவது சீடராகிய தமது கடமை என்று கூறினார்.

இதைக்கேட்டு எரிச்சலுற்ற பெண்மணி, சரி வடை என்பதால் போயிற்று. இதுவே உன்னுடைய கண்ணைக் கொடு என்றால் உடனே பெயர்த்து கொடுத்து விடுவாயா என்று கோரக்கரிடம் கேட்டாள்.

இதனைக் கேட்ட கோரக்கர் என்னுடைய குரு என் கண்ணைக் கேட்டாலும் கொடுக்கக் காத்திருக்கிறேன் என்று கூறி, அந்தக் கண்ணை நீயே வைத்துக் கொண்டு வடை கொடு என்று தன்னுடைய ஒரு கண்ணை பெயர்த்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்து விட்டார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத அந்தப்பெண்மணி, மிகுந்த அச்சம் கொண்டு இனிமையான வடைகளை சுட்டு கோரக்கரிடம் கொடுத்து அனுப்பினாள். அதனைக் கோரக்கர் தன்னுடைய குருவிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.

வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரைப் பார்த்து உனது ஒரு கண் எங்கே என்று கேட்டார். கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார். இதனைக் கேட்ட குரு தன் சீடன் தன்மீது வைத்திருந்த அன்பை உணர்ந்து கோரக்கர் இழந்த கண்ணைத் திரும்பப் பெறுமாறு செய்தார்.

0 comments:

Post a Comment