Friday, 21 October 2011
திருவண்ணாமலை சித்தர் - பத்ராச்சல சுவாமிகள்!
எத்தனையோ சித்தர்கள் ஏன் என்ற சிந்தனை கொள்ளாமல் இறைவன் இங்கு தான் இருக்கின்றான் என்று உறுதி செய்து இறைவனை வழிபட்ட தலம் திருவண்ணாமலை. இந்த அண்ணாமலையில் மனிதர் எவருடைய தயவையும் நாடாமல் தவத்தைத் தொடர்ந்த சித்தர்களுள் பத்ராச்சல சுவாமிகளும் ஒருவர்.
இவரது பூர்வீகம் எது என்று தெரியாத நிலையில் அழுக்குத் துணிமூட்டை ஒன்றைக் கையிலேந்தி காலில் ஒரு வளையம் அணிந்து தேரடிக்கு அருகில் மனித சிந்தனையற்று அமர்ந்திருப்பார். அங்கு படிந்திருக்கும் மணலில் வரிசை வரிசையாக ஏதோ எழுதிக் கொண்டிருப்பார். யாரேனும் எதுவும் கேட்டால் கூட பதில் எதுவும் சொல்ல மாட்டார்.
மனிதருக்கு பசியெடுத்தால் பிச்சை எடுக்க வேண்டும் அல்லவா? இவர் எந்த வீட்டிலாவது அல்லது உணவு விடுதியிலாவது யாசகம் கேட்டு யாரும் பார்த்தது இல்லை. இவர் தனக்கு வேண்டிய உணவு உடைக்காக யாருடைய தயவையும் நாடவில்லை. மிகவும் எளிதாகக் கிடைக்க கூடியதும் பிறர் விரும்பாததுமான ஒன்றினை உணவாகக் கொண்டிருந்தார் என்பர்.
அண்ணாமலையாரை மட்டும் அனுதினமும் வணங்கி அமைதியான வாழ்க்கையத் தொடர்ந்த இந்த அபூர்வ சித்தர் சேஷாத்ரி ஆசிரமத்தினருகில் சாமாதியடைந்தார். பிறருக்கு நன்மை செய்யாவிட்டால் கூட எந்தத் தீமையும் செய்யாமலிருத்தல் கூட ஒரு பெரிய தவம் என்று உலகுக்கு உணர்த்திய மகாஞானி இந்தச்சித்தர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment